'அண்ணன்சீர், மண்ணின் மகள், வெற்றி மடிக்கணினி' - பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் விவரம் நேரலை

விஜய் அரசின் முதல் பட்ஜெட் விவரம் நேரலை

பட மூலாதாரம், TN DIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார்.

பட்ஜெட் உரையை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன், "உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சரித்திர வெற்றியைப் பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய். 3 மாதங்களிலேயே ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார் முதலமைச்சர். சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளுடன் தொடங்கிய இந்த அரசு பலவற்றை செய்து காட்டியுள்ளது." என்றார்.

கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டங்களையும் அமைச்சர் மரிய வில்சன் பட்டியலிட்டார். தொலைநோக்கு திட்டங்களை அடைவதற்கான பாதையை இந்த பட்ஜெட் வழிவகுத்து காட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டின் நிதிநிலையை வெள்ளை அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம்." என்றார்.

"திட்ட அனுமதி பெறுவதில் வெளிப்படைத்தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளது. வருவாய் ஆதாரங்களை பெருக்கி நிலைத்தன்மையை அதிகரிக்கவும் மத்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது."

இதையடுத்து திட்டங்களை அறிவிக்க ஆரம்பித்தார் அமைச்சர் மரிய வில்சன். அந்த விவரங்கள் பின்வருமாறு...

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி தொடர்ந்திl ரூ.372 கோடி பள்ளிப்படிப்பு மற்றும் மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்காகவும் 77 கோடி ரூபாய் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மற்றும் பல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கும், 13.41 கோடி ரூபாய் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு மாணவிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகைக்காகவும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சமூகநீதி

  • அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ. 36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 362 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக வெற்றி தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும். மொத்த திட்ட செலவில் மூலதன மானியம், மொத்த மானியம் பெற ஏதுவாக இந்த பட்ஜெட்டில் ரூ. 72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் 'மண்ணின் மகள்' திட்டம் செயல்படுத்தப்படும். பயனாளிகளுக்கு விவசாயம் செய்ய தேவையான நவீன பயிற்சி வழங்கப்படும். இந்த பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாடு திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • பழங்குடியினர் குடியிருப்புகளை மேம்படுத்த 'ஆன்றோர் மேம்பாட்டு திட்டம்' செயல்படுத்தப்படும். இதன்கீழ் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
  • ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு கூறுகள் திட்டத்தில் ரூ.25,225 கோடியும் பழங்குடியினருக்கு ரூ.2,079 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • இந்த பட்ஜெட்டில் சமூகநீதி துறைக்கு ரூ. 3,937 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சிறுபான்மையினர் நலன்

  • தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் முதன்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் ரூ.25,000 மானியம் இனி ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும்.
  • கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் ரூ.105 கோடி ஒதுக்கீட்டில் கூடுதலாகத் துவக்கப்படும்.
  • கபர்ஸ்தான்கள், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 34 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு

  • சிறந்த திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக 10 சிறப்பு ஒலிம்பிக் மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும். இதற்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • விளையாட்டில் ஆர்வம் கொண்ட 8 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிப்பதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • 500 வீரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • கிராமிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த ரூ.42 கோடியும் தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளி நேரத்துக்கு பிறகு 1 மணிநேரம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகள் செயல்படுத்தப்படும்.
  • அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிறிய உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் உருவாக்கப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விஜய் அரசின் முதல் பட்ஜெட் விவரம் நேரலை

பட மூலாதாரம், TN DIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன்

பள்ளிக்கல்வித் திட்டங்கள்

  • அரசு பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, வகுப்பறைகள், கழிப்பறைகள் சுத்தம், பள்ளிகளுக்கு 24 மணிநேர பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். முதல்கட்டமாக 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் 139 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
  • 2514 தொடக்கப்பள்ளிகள், 365 நடுநிலைப் பள்ளிகள், 855 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ரூ.2132 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • பெருந்தலைவர் காமராஜர் மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகளை அரசு அமைக்கும். 9-12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கும் இப்பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்தாண்டு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • தமிழ்நாட்டை கற்றல் வெளிப்பாடுகளில் முன்னேற்ற பள்ளி பாடத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும் தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 10581 என்ற உதவி எண்ணும் பள்ளிகளில் தெளிவாக காட்சிப்படுத்தப்படும். இத்திட்டத்துக்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 'DrugsfreeTamilnadu' எனும் செயலி மூலமாக போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு குறித்து ரகசியமாக தகவல் தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • பொது நூலகங்களை டிஜிட்டல்மயமாக்கி, மறுசீரமைப்பு செய்வதற்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அரசு மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் இந்தாண்டு 11 ஆம் வகுப்பு படிக்கும் 'ஜென் ஸி' தலைமுறை மாணவர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பீட்டில் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய நவீன பிராண்டட் சைக்கிள்கள் வழங்கப்படும்.
  • தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 44,527 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி

  • நீட் தேர்வை ரத்து செய்து 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.
  • தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு 'வெற்றி மடிக்கணினி' திட்டத்தை செயல்படுத்தும். ரூ. 2000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
  • 'TN சுடர்' மாணவர் குடியிருப்புகளின் மாநில அளவிலான மேம்பாட்டு வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் எனும் முதன்மை திட்டத்தின் கீழ் முக்கிய கல்வி மையங்களில் ஒரு லட்ச நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் கட்டப்படும். சுமார் ரூ. 3200 கோடி மதிப்பீட்டில் பொது-தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு 20% அரசு மானியமாக அடுத்த 2 நிதியாண்டுகளில் ரூ. 640 கோடி ரூபாய் வழங்கப்படும். இவை உயர்தர வளாகங்களாக மாற்றியமைக்கப்படும். 24 மணிநேர குளிரூட்டப்பட்ட கற்றல் மையங்கள் உள்ளிட்டவை இதில் அமைக்கப்படும். பல்வேறு மதங்களை சேர்ந்த மாணவர்களை இத்திட்டம் ஒருங்கிணைக்கும்.
  • 2027-2028 கல்வியாண்டில் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி 300 மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்கப்படும்.
  • உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு

  • மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் பராமரிப்பு குறித்து வாகனங்கள் பழுது பார்ப்பவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பழுது பார்ப்பவர்கள் 12,500 பேர் உட்பட 22,500 பேர் இத்திட்டத்தால் பயன்பெறுவர். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் தொழில் பிரிவு ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் 5 ஆண்டுகளில் 24,000 மாணவர்கள் செயற்கை நுண்ணறிவில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்புகளை பெற வழிவகை செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ. 7.5 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • போட்டித் தேர்வுகளுக்கான அரசு பயிற்சி மையங்களை கூடுதலாக ஏற்படுத்த ரூ. 3.38 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் 'வெற்றி திறன் பயிற்சி திட்டத்தை' அரசு அறிமுகப்படுத்துகிறது. முதல்கட்டமாக 20,000 இளைஞர்களுக்கு பணியிட பயிற்சி வழங்கப்படும்.
  • பாலிடெக்னிக் படிக்கும் 5 லட்சம் இளைஞர்களுக்கு 2031ஆம் ஆண்டுக்குள் பொறியியல், செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்கப்படும். 6-8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த அடிப்படை பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். 9-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலை பயிற்சியும் 11-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு விருப்ப பாடங்களும் வழங்கப்படும்.
  • தொழிலாளர் நலன் மற்றும் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 2,022 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறப்பு திட்டம் செயலாக்க துறைக்கு ரூ.17,150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

8 கிராம் தங்கம், பட்டுப்புடவை

  • இந்த பட்ஜெட்டில் அண்ணன்சீர் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மணமகளுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை ஆகியவை வழங்கப்படும்.
தமிழக முதலமைச்சர் விஜய்

பட மூலாதாரம், TNDIPR

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று அரசு அமைத்ததை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் நாளை தாக்கல் செய்கிறார்.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் வரவிருக்கும் நாட்களில் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளும் அவற்றின் மீதான விவாதங்களும் நடைபெறும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு