தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்: 'மண்நல அட்டைகள், உயிர்ம வேளாண்மைக்கு ஊக்கத்தொகை'; நேரலை

பட மூலாதாரம், TN Assembly
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தவெக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று தாக்கல் செய்து வருகிறார்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 ஆம் ஆண்டுக்கான தமிழகப் பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கான இலவச மின்சார மானியத்துக்காக மட்டும் ரூ.7,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக பயிர்க் கடன்கள் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதன் விவரம்:
- சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதன் பாதிப்பை குறைக்க வேளாண் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள மாவட்ட வாரியான திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- மண்வள பாதுகாப்பு இயக்கம் ரூ.600 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- 1 லட்சம் விவசாயிகளுக்கு 4 கோடி ரூபாய் செலவில் மண்நல அட்டைகள் வழங்கப்படும்.
- ஏக்கர் 3 ஆயிரம் ரூபாய் உழவு மானியம் வழங்கப்படும். இதற்காக 63.5 கோடி ரூபாய் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
- மண்வளத்தை பாதுகாக்கவும் ரசாயன பயன்பாட்டை குறைக்கவும் ஒரு லட்சம் ஏக்கருக்கு தேவையான திரவ உரங்கள் வழங்கப்படும். இதற்காக 4.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- உயிர்ம வேளாண்மையை பரவலாக்க, 20 ஆயிரம் ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- உயிர்ம விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஐந்து விவசாயிகளுக்கு "நம்மாழ்வார் விருது". பாராட்ட பத்திரம் மற்றும் தலா ரூ.2 லட்சம் விருது பெறுபவருக்கு வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தென்னை விவசாயிகளின் நலனுக்காக மொத்தம் ரூ.16 கோடி ஒதுக்கப்படுகிறது. தென்னை நோய் தடுப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படுகிறது. நிலையான சந்தைவாய்ப்பை உருவாக்க ரூ.22.30 கோடியில் தென்னை பதப்படுத்தும் கழக்கம் அமைக்கப்படும்.
- ப்ளூ பெர்ரி, ட்ராகன் ப்ரூட், பேசன் ப்ரூட், கிவி, அவகாடோ போன்ற பழங்களை மக்கள் தற்போது உட்கொள்வதால் இந்த பழங்களை விவசாயிகள் தனி பயிர்களாகவும், ஊடு பயிர்களாகவும் 930 ஏக்கரில் பயிர் செய்ய ரூ.1.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images
தேர்தலுக்கு முன் தவெக தனது தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்கடன் முழுமையான ரத்து செய்யப்படும் எனவும் அதற்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்கடனில் பாதி ரத்து செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விஜய் தலைமையிலான தவெக அரசு முதலில் ரூ.50,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழு கடன் தள்ளுபடி என அறிவித்தது.
இதற்கு விவசாயிகள் மத்தியில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரூ.75,000 வரை கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ரூ75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு கடன் தொகையில் ரூ,35,000 தள்ளுபடி எனவும் அறிவித்தது. ஆனால் இதற்கு பல்வேறு வேளாண் சங்கங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. முழு கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த பின்னணியில் பயிர் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே போல், நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தி வழங்கப்படவேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என விவசாய சங்கங்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.5,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































