தனது லைஃப் ஜாக்கெட்டை முதியவருக்கு கொடுத்து வெள்ளத்தில் உயிரிழந்த கேரளத்தின் 'ரியல் ஹீரோ'

பட மூலாதாரம், @vdsatheesan/X
ஒவ்வொரு வருடமும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கேரளம் , பெரும் மழை மற்றும் வெள்ளங்களை எதிர்கொள்ளும். குறிப்பாக 2018-ஆம் ஆண்டு, 'கடவுளின் தேசம்' தண்ணீரில் மிதந்தது. ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழையும் வெள்ளமும் அப்போது கேரளத்தைப் புரட்டிப்போட்டது.
அந்த பேரிடர் காலத்தின்போது, சாதாரண கேரள மக்கள் பலரும் தன்னார்வலர்களாக களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதில் ஒருவர்தான் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்.
இம்முறையும் பருவ மழை காரணமாக கேரளத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ராஜேஷும், ஒரு தன்னார்வலராக மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.
கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை, கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 61 வயது முதியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ராஜேஷ். அவரை மீட்கும் முயற்சியில், தான் அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டை அந்த முதியவருக்கு அளித்துள்ளார்.
அந்த முதியவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், ராஜேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவர் உயிரோடு மீட்கப்படுவார் என அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், மூன்று நாட்கள் தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட ராஜேஷின் உடல் அரசு மரியாதையோடு நேற்று (ஆகஸ்ட் 6) தகனம் செய்யப்பட்டது.

திருவனந்தபுரத்தின், தெட்டிவிளா பகுதியைச் சேர்ந்த 36 வயதான ராஜேஷ் ஒரு ராப்பெல்லிங் (Rappelling) பயிற்சியாளர். பேரிடர்களின்போது மீட்புப் பணிகளில் ஈடுபடும் 'அட்வெஞ்சர் டிசாஸ்டர் சொசைட்டி' எனும் தன்னார்வலர்கள் மற்றும் வல்லுநர்கள் குழுவிலும் இவர் உறுப்பினராக இருந்துள்ளார்.
"ராஜேஷின் மறைவால் அவரது குடும்பம் மட்டுமல்லாது தெட்டிவிளா பகுதி முழுவதுமே சோகத்தில் இருப்பதாகக்" கூறுகிறார் ராஜேஷின் நண்பர் விஷ்ணு.
"2024 வயநாடு நிலச்சரிவு சம்பவத்தின்போதும் அவர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். ஒரு பேரிடர் சூழலின்போது எப்படி மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டுமென என அவர் பலருக்கு பயிற்சி அளித்துள்ளார். தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்களுக்கு மலையேற்றப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்" என்கிறார் விஷ்ணு.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், செருபுழா நகரத்தின் அருகே உள்ள புளிங்கோமே எனும் கிராமத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது கர்நாடக மாநில எல்லையை ஒட்டிய ஒரு பகுதியாகும்.
இந்தப் பகுதியில் காபி தோட்டம் வைத்துள்ள பென்னி என்ற 61 வயது முதியவர் தான் ராஜேஷால் மீட்கப்பட்டவர்.
"ராஜேஷ் மட்டும் இல்லையென்றால், நான் நிச்சயம் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். ஆனால், 61 வயது முதியவனான என்னைக் காப்பாற்ற ராஜேஷ் போன்ற ஒரு இளைஞர் தனது உயிரை பணயம் வைத்திருக்க தேவையில்லை" என ஊடகங்களிடம் பேசியுள்ளார் பென்னி.

"ஆகஸ்ட் 1, எனது காபி தோட்டத்திற்குச் சென்றேன். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், தோட்டத்தில் சில பணிகள் இருந்தன. முதலில் கணுக்கால் அளவு தான் தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது. பின்னர் திடீரென அதிக வெள்ளம் பாயத் தொடங்கியது. தோட்டத்திலிருந்து வெளியேற முயற்சிக்கையில், இடுப்பளவு நீர் ஏறிவிட்டது. நான் பயந்து எனது வீட்டிற்கு கைப்பேசியில் அழைத்து விவரங்களைக் கூறினேன். அடுத்த சில நிமிடங்களில் வெள்ளத்தில் நான் அடித்துச் செல்லப்பட்டேன்" என பென்னி விவரித்துள்ளார்.
தான் ஒரு தென்னை மரத்தை இறுகப் பற்றிக்கொண்டு தவித்தபோது, ராஜேஷ் மற்றும் குழுவினர் உதவிக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மீட்புப் பணிகளில் ராஜேஷுடன் இணைந்து பணியாற்றிய அவரது நண்பர் பிஜு அன்று நடந்ததை விவரித்தார். "பென்னி இருந்த மரத்தை நோக்கி, ஒரு கயிறு வீசப்பட்டது. அதை அவர் பிடித்து தென்னை மரத்தில் கட்ட முயற்சி செய்தார். ஆனால், அவர் திணறுவதைப் பார்த்த ராஜேஷ் உடனடியாக நீந்தி பென்னி அருகில் சென்றார். கயிறு தென்னை மரத்தில் கட்டப்பட்டு, பென்னியை மீட்கத் தொடங்கினார்" என அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
"பென்னி மிகவும் களைப்படைந்திருந்ததால் ராஜேஷ் தான் அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டை அவருக்கு அணிவித்தார். மீட்புக் குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் ராஜேஷுடன் இருந்தனர். கரையை நோக்கி கயிற்றைப் பிடித்துக்கொண்டு அவர்கள் அனைவரும் முன்னேறினர். அப்போது திடீரென ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது. ராஜேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்" என்கிறார் பிஜு.
உடனடியாக ராஜேஷை மீட்கும் பணிகள் தொடங்கின எனக் குறிப்பிடும் பிஜு, "ராஜேஷ் மிகச்சிறப்பாக நீச்சல் அடிக்கக்கூடியவர். இத்தகைய சூழல்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆனால், வெகு நேரம் குளிர்ந்த நீரில் இருந்ததால், அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டிருக்கலாம். அதனால் நீந்த அவர் சிரமப்பட்டிருப்பார். அவர் உயிருடன் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில்தான் மீட்பு பணிகள் நடந்தன" என்கிறார்.
முதலமைச்சர் அஞ்சலி

பட மூலாதாரம், @vdsatheesan/X
ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 4-ஆம் தேதி ராஜேஷின் உடல் கரியங்கோடே நதியில் கண்டெடுக்கப்பட்டது. ராஜேஷின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கேரளம் முதலமைச்சர் வி.டி.சதீசன், "ராஜேஷின் உடல் அரசு மரியாதையோடு தகனம் செய்யப்படும். அவர் தனது உயிரைக் கொடுத்து, மற்றொரு உயிரைக் காப்பற்றியுள்ளார். பல பேரிடர் சூழல்களில் களத்தில் பணியாற்றியுள்ளார். அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும். அவரது கட்டிமுடிக்கப்படாத வீட்டை முழுமையாக கட்டிக் கொடுக்க அரசு உதவி செய்யும்" என்று குறிப்பிட்டார்.
"ராஜேஷுக்கு ஷாஃபியா என்ற மனைவியும், அர்ஷான் மற்றும் அபிஷேக் என இரு மகன்களும் உள்ளனர். அவரது குடும்பம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பம்தான். இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பு தான், கண்ணூரில் பேரிடர் மீட்பு தொடர்பான ஒரு பயிற்சியை முடித்துவிட்டு அவர் வீடு திரும்பியிருந்தார். கிராமத்தில் எந்தவொரு பொதுப் பணியாக இருந்தாலும், முதல் நபராக ராஜேஷ் நிற்பார்" என்கிறார் தெட்டிவிளா பகுதியைச் சேர்ந்தவரும் ராஜேஷின் நண்பருமான விஷ்ணு.

பட மூலாதாரம், Getty Images
கேரளத்தில் 2018இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை மையமாகக் கொண்டு, டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி நடிப்பில் '2018' என்ற திரைப்படம் வெளியானது. அதில் ஒரு முதியவரை வெள்ளத்திலிருந்து மீட்கும் முயற்சியில், தனது உயிரை இழக்கும் 'அனூப்' என்ற இளைஞரின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் டொவினோ தாமஸ். இதைக் குறிப்பிட்டு, ராஜேஷ் கேரளத்தின் 'ரியல் ஹீரோ' என பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
"ஒவ்வொரு வருடமும் கேரளம் கடும் மழை மற்றும் வெள்ளங்களை எதிர்கொள்ளும்போது ராஜேஷ் போன்ற தன்னார்வலர்கள் தான் முதலில் களத்தில் நிற்பவர்கள். எனவே ராஜேஷின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கிறார் விஷ்ணு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































