டி20 போட்டிகளில் பலவீனமாகத் தெரிந்த இந்திய அணி இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது எப்படி?

இந்திய அணியின் அக்சர் படேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூலை 14 அன்று பிரிட்டனின் பர்மிங்காமில் உள்ள எஜ்பாஸ்டன் மைதானத்தில், இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் போது இந்திய அணியின் அக்சர் படேல்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், எஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டி20 தொடரில் இந்திய அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் இது ஒரு வித்தியாசமான இந்திய அணியாக இருந்தது. இந்த ஒருநாள் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷுப்மன் கில் போன்ற முன்னணி வீரர்களின் வருகையோடு இந்திய அணி மேலும் பலம்பெற்று களம் இறங்கியது.

இங்கிலாந்து நிர்ணயித்த 259 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், ஷுப்மன் கில் மிக முக்கியப் பங்களிப்பை வழங்கினார். ஆனால், இந்தியா வெற்றி இலக்கை எட்ட இன்னும் 99 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுடன், கில்லும் தசைப்பிடிப்பு காரணமாக ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.

இருப்பினும், இந்த இக்கட்டான சூழ்நிலை அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடியை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அக்சர் ஆக்ரோஷமான ஆட்டக்காரராக அதிரடி காட்ட, சுந்தர் மறுமுனையில் விக்கெட் விழாமல் நிதானமாகப் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இறுதியில், இந்தியா 28 பந்துகள் மீதமிருக்க எளிதாக வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

அக்சர் 52 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி ஒருவேளை 290 ரன்கள் வரை எட்டியிருக்கலாம், ஆனால் அக்சர் படேல், டாசனை டீப் ஸ்கொயர் லெக் திசையில் புல் ஷாட் விளையாட கட்டாயப்படுத்தினார், அங்கு அவர் கேட்ச் ஆனார். இதன் பின்னர், இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர், கீழ்வரிசை பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அக்சர் படேலின் இந்த மிகச்சிறப்பான செயல்பாடு குறித்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தனது எக்ஸ் தளத்தில் "இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகுந்த திருப்தியைத் தரும். ஏனெனில், அணிக்கு நீண்ட நாட்களாகத் தேவைப்பட்ட இரண்டு ஆல்ரவுண்டர்களின் சிறந்த பார்ட்னர்ஷிப் தான் இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. அக்சர் படேல் எவ்வித பிழையுமின்றி விளையாடினார்; அதே நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் இன்னிங்ஸ் முழுவதும் ஆட்டத்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்," என எழுதியுள்ளார்.

இந்திய அணியின் அக்சர் படேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 14 ஜூலை 2026 அன்று பர்மிங்காமில் உள்ள எஜ்பாஸ்டன் மைதானத்தில், இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின் போது தனது அரைசதத்தைக் கொண்டாடும் அக்சர் படேல்.

அனைத்து வகையிலும் முத்திரை பதித்த அக்சர்

இப்போட்டிக்கு முன்னதாக, அக்சர் படேல் தனது கடைசி ஒருநாள் போட்டியை கடந்த ஆண்டு சிட்னியில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் அவர் சிறப்பாக பந்துவீசிய போதிலும், அவருக்குப் பதிலாக முதலில் ரவீந்திர ஜடேஜாவுக்கும், பின்னர் ஹர்ஷ் துபேவுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அணியில் இடம்பிடிப்பதற்கான கடும் போட்டிக்கு மத்தியில், அக்சர் படேலுக்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. வாஷிங்டன் சுந்தருடனும் அவருக்கு ஒரு சிறிய போட்டி இருந்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டாப்-5 பேட்ஸ்மேன்களில் தொடர்ந்து வலதுகை பேட்ஸ்மேன்கள் களம் இறங்குவதைத் தவிர்க்கும் வகையில் (வலது-இடது காம்பினேஷனுக்காக), தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், கே.எல். ராகுலுக்கு முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அக்சர் படேல் இதே பாத்திரத்தை ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கிரிக்கெட்டில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பிறகு, செவ்வாய்க்கிழமை அவர் வெளிப்படுத்திய இந்த ஆல்ரவுண்ட் ஆட்டம், மற்ற அனைத்து ஃபிங்கர் ஸ்பின்னர்களை விடவும் அக்சரை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி ஒரே ஒரு ஃபிங்கர் ஸ்பின்னருடன் மட்டுமே களம் இறங்க வாய்ப்புள்ள சூழலில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

இங்கிலாந்து இன்னிங்ஸின் மிக முக்கியமான கட்டத்தில் பந்துவீசிய அக்சர், அவர்களின் சதமடித்த பார்ட்னர்ஷிப்பை முறியடித்தார். அத்துடன் கீழ்வரிசை பேட்ஸ்மேன்களையும் சுருட்டி, ஜோ ரூட் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாட வாய்ப்பில்லாமல் செய்தார்.

இருப்பினும், இந்திய அணி நிர்வாகத்துக்கு அவரின் பந்துவீச்சை விட பேட்டிங் தான் மிகவும் பிடித்திருக்கும். இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது, அக்சர் படேல் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து இன்னிங்ஸை மீட்டெடுத்தார்.

இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கும் மேல் சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பில் அக்சர் அதிரடியாக விளையாடி, இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றினார்.

4 விக்கெட்டுகள், ஆட்டமிழக்காமல் ஒரு அரைசதம் மற்றும் ஆட்டநாயகன் விருது – ஓரு ஆல்ரவுண்டருக்கு இதைவிட ஒரு சிறந்த ஆட்டத்தை கற்பனை செய்து பார்ப்பது கடினம்.

ஷுப்மன் கில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 14 ஜூலை 2026 அன்று பர்மிங்காமில் உள்ள எஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில், இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் போது தனது அரைசதத்தைக் கொண்டாடும் ஷுப்மன் கில்.

இங்கிலாந்து அணியின் டி20 ஆதிக்கம் காணப்படவில்லை

கேப்டன் கில் 80 ரன்கள் எடுத்து மிக எளிதாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஆனால், காயம் காரணமாக அவர் ஆட்டத்தின் நடுவே வெளியேற வேண்டியிருந்தது. இருப்பினும், பின்னர் அது வெறும் தசைப்பிடிப்பு தான் என்றும், கார்டிஃப் நகரில் வியாழக்கிழமை நடக்கவுள்ள இரண்டாவது போட்டிக்கு முழு தகுதியுடன் இருப்பார் என நம்புவதாகவும் அவரே தெளிவுபடுத்தினார்.

இந்திய அணி 149 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த நிலையில், திடீரென 160 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என சரிவைச் சந்தித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு போட்டியில் மீண்டு வர ஒரு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், பந்துவீச்சில் 62 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் படேல், பேட்டிங்கிலும் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுக்க, மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்து இந்தியாவை மிக எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஒரு கட்டத்தில், இந்த ஆட்டம் மதியத்தைக் கூட தாண்டாது என்பது போல் தோன்றியது. ஆனால், ஜோ ரூட் மற்றும் லியாம் டாசன் ஜோடிக்கு இடையே அமைந்த 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணியை ஓரளவிற்குத் தாங்கிப் பிடித்தது.

டாசனின் 68 ரன்கள் சர்வதேச கிரிக்கெட்டின் எந்தவொரு வடிவத்திலும் இங்கிலாந்து அணிக்காக அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதே நேரத்தில் ரூட் தனது வழக்கமான பாணியில் மிகச்சிறப்பாக விளையாடி 76 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணி தனது கடைசி நான்கு விக்கெட்டுகளை வெறும் 30 ரன்களுக்குள் இழந்ததால், ரூட் மறுமுனையில் ஆட்டமிழக்காமல் நிற்க வேண்டியதாயிற்று. இதன் மூலம் இந்தியாவுக்கு ஒரு குறைந்த இலக்கு கிடைத்தது, அது எந்தக் கட்டத்திலும் வெற்றிக்கு போதுமானதாகத் தோன்றவில்லை.

டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலகின் நம்பர் ஒன் அணியாக மாறியுள்ளது. இருப்பினும், ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த அணிக்கு இது வழக்கமான ஒரு தோல்வியாகவே அமைந்தது. இன்னும் 19 மாதங்களில் தொடங்கவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் பலமான அணியாக உருவெடுக்க, இங்கிலாந்து இன்னும் எவ்வளவு வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது என்பதை இந்தத் தோல்வி தெளிவுபடுத்தியுள்ளது.

உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறுவது குறித்த கேள்வியும் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி உலக தரவரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளது. நேரடியாகத் தகுதி பெற அது முதல் ஒன்பது இடங்களுக்குள் நீடிக்க வேண்டும். இருப்பினும், பத்தாவது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்போதைய ஃபார்மைப் பார்க்கும்போது, மெக்கல்லமின் இங்கிலாந்து அணி தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடாமலேயே நேரடியாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுவிடும் என்றே தோன்றுகிறது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியால் பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

ரோஹித் மற்றும் கோலி சிறப்பாக விளையாடவில்லை

ஜனவரி மாதம் இலங்கையில் பெற்ற வெற்றியைச் சேர்த்த போதிலும், இங்கிலாந்து அணி தனது கடந்த 20 ஒருநாள் போட்டிகளில் சந்தித்த 14ஆவது தோல்வி இதுவாகும்.

இப்போட்டியில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு சாதகமாக இருந்தபோதிலும், இங்கிலாந்து அணியில் ஒரு முதன்மை வேகப்பந்து வீச்சாளர் இல்லாத குறை தெரிந்தது. அவர்களின் ஆல்ரவுண்டர்களும் இந்திய ஆல்ரவுண்டர்களுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இறுதியில் இப்போட்டி சுற்றுலா வந்த இந்திய அணிக்கு மிக எளிதான வெற்றியாக மாறியது. இதனால் பர்மிங்காமில் திரண்டிருந்த இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

தற்போதைய உலக சாம்பியனான இந்திய அணி, முன்னதாக நடந்த டி20 தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால், இந்த ஒருநாள் அணியில் முன்னணி நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்ததால், இத்தொடர் சவாலானதாக இருக்கும் என்பது முன்பே உறுதியாகியிருந்தது.

பும்ராவின் ஆரம்பகட்ட பந்துவீச்சு எஜ்பாஸ்டன் மைதானத்தில் ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்தியது; அதே நேரத்தில் இங்கிலாந்தில் தனது கடைசித் தொடரை விளையாடிக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 37 வயதான விராட் கோலி, கவர் திசையில் ஃபீல்டிங் செய்யும்போது மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டார்.

39 வயதான ரோஹித் சர்மாவும் அநேகமாக இந்த நாட்டில் கடைசி முறையாக விளையாடுகிறார். இலக்கைத் துரத்தத் தொடங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்தபோது சாம் கரனின் பந்துவீச்சில் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே விராட் கோலி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஷுப்மன் கில்லுக்கு இந்த மைதானம் மிகவும் அனுகூலமான ஒன்றாக உள்ளது. கடந்த ஆண்டு இங்கு நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் 430 ரன்கள் குவித்திருந்தார். இப்போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து அவர் அமைத்த 101 ரன்கள் பார்ட்னர்ஷிப், போட்டியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த இன்னிங்ஸின் போது கில் பல அழகான டிரைவ் ஷாட்டுகளை ஆடினார்.

ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பர்மிங்காமில் உள்ள எஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில், இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் போது பந்துவீசும் ஜஸ்பிரித் பும்ரா.

ஜஸ்பிரித் பும்ராவின் அபார ஆட்டம்

ஜோஷ் டங்கின் பந்துவீச்சில் ஷுப்மன் கில் ஒரு புல் ஷாட் மூலம் பவுண்டரி அடித்த அடுத்த கணமே, அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்படத் தொடங்கியதால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதன் பின்னர், ஹாரி ப்ரூக்கின் நேரடி த்ரோ மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் ரன் அவுட் ஆனார். கே.எல். ராகுல், ஜோஷ் டங்கின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

லியாம் டாசன் அணியில் இடம் பெற்றிருந்ததால், இங்கிலாந்தின் ஆடும் லெவனில் தேவைக்கும் அதிகமான சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுவிட்டனர் என்ற வாதமும் எழலாம்.

ஒருவேளை ஜேமி ஓவர்டன் முழு உடல் தகுதியுடன் இருந்திருந்தால், டாசனுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால், அவர் இல்லாத சூழலில் டாசன் மிகச்சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை ஒரு பெரிய அவமானத்தில் இருந்து காப்பாற்றினார்.

இங்கிலாந்து அணியின் ஆரம்பகட்ட பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்றும், பின்னர் 107 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்றும் சரிவைச் சந்தித்தது.

பென் டக்கெட் 43 ரன்கள் எடுத்தார், ஆனால் புதிய தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜேக்கப் பெத்தேல் விளையாட மிகவும் சிரமப்பட்டார். அதே நேரத்தில், இங்கிலாந்து அணிக்காக 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஜோஸ் பட்லர், இப்போட்டியில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

ஜஸ்பிரித் பும்ராவின் விளையாட்டு மிகச்சிறப்பாக இருந்தது. அவருடைய பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் 31 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் என்று மட்டுமே காட்டினாலும், அவர் அதைவிட பல மடங்கு சிறப்பாகப் பந்துவீசினார். ஹாரி ப்ரூக் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த போது, பும்ரா வீழ்த்திய அந்த ஒரே ஒரு விக்கெட்டும் அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது.

இங்கிலாந்து அணியின் எட்டாம் வரிசை பேட்ஸ்மேனான டாசன், 22ஆவது ஓவரில் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்தார். அவர் களம் இறங்கிய உடனே இன்னிங்ஸுக்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொடுத்தார். அவர் வலுவான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பல தருணங்களில் ரூட்டை விட அதிக ஸ்ட்ரைக்கை தன்வசமே வைத்திருந்தார்.

டாசன் இப்போட்டியில் 83 பந்துகளை எதிர்கொண்டார். இது அவர் தனது முந்தைய ஒன்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒட்டுமொத்த பந்துகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமாகும்.

7 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோ ரூட்டுக்கு கேட்ச் வாய்ப்பு நழுவியதன் மூலம் அதிர்ஷ்டம் கிடைத்தது. அதன் பின்னர் அவர் மிகச்சிறப்பாக விளையாடினார். 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அவருடைய சராசரி 70 ஆக உள்ளது.

அக்சர் படேல் வீசிய ஆறு பந்துகளுக்குள் ஆதில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகிய மூவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ரூட்டுக்கு மறுமுனையில் துணை நிற்க எந்தவொரு பேட்ஸ்மேனும் இல்லாததால் இங்கிலாந்து அணி ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தனது கடந்த 19 ஒருநாள் போட்டிகளில், முழுமையாக 50 ஓவர்கள் கூட விளையாடாமல் ஆட்டமிழப்பது இது 11ஆவது முறையாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு