சோனம் வான்சுக் 'குளுக்கோஸ் ஏற்ற, திரவ உணவு உட்கொள்ள மறுக்கிறார்' - மருத்துவமனை கூறுவது என்ன?

சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி - மனைவி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)

டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 21வது நாளை எட்டியுள்ளது.

பிடிஐ செய்தி முகமையின்படி, கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜந்தர் மந்தரில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர் மருத்துவமனையில், குளுகோஸ் மூலமாகவோ அல்லது வாய் வழியாகவோ எந்தவொரு திரவ உணவையும் உட்கொள்ள மறுத்துவிட்டதாக மருத்துவக் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ, அவரது அனுமதியின்றி அவருக்கு வாய் வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ எதுவும் வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

கீதாஞ்சலி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "சோனம் வாங்சுக் அனுமதிக்கப்பட்டுள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் நான் இருக்கிறேன். நானும், அவரது குடும்பத்தினரும், கடந்த 20 நாட்களாக அவரைக் கண்காணித்து வரும் மருத்துவர்களும் ஒப்புதல் அளிக்கும் வரை, அவருக்கு வாய் வழியாகவோ அல்லது நரம்பு வழியாகவோ எந்த மருந்தையோ அல்லது திரவத்தையோ வழங்க வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜந்தர் மந்தரில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்படும் சோனம் வாங்சுக்

இதற்கிடையில், 'காக்ரோச் ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பக்கத்தில், அபிஜித் தீப்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"ஜூலை 20 அன்று திட்டமிடப்பட்டிருந்த 'சலோ சன்சத்' (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்" என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய 'காக்ரோச் ஜனதா கட்சி'யின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தான் சிறிதுநேரம் போராட்டக் களத்தை விட்டு வெளியே சென்றிருந்ததாகக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் "காலை 7 மணிக்கு நான் போராட்டக் களத்தை விட்டு சற்று வெளியே சென்றிருந்தபோது, ​​அங்கு வந்த காவல்துறையினர் சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 60 வயது முதியவரை அவர்கள் பலவந்தமாக அழைத்துச் சென்றனர். சோனம் சார் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்தபோது, ​​நான் என் நண்பரின் வீட்டிலிருந்து ஜந்தர் மந்தருக்கு வந்து கொண்டிருந்தேன்" என்றார்.

"காவல்துறையினர் என்னையும் தாக்கினார்கள். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய நான் என்ன குற்றவாளியா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து தகவல் அளித்த புதுடெல்லி டிசிபி தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, உரிய மருத்துவ சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.

 சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்

பட மூலாதாரம், @abhijeet_dipke

படக்குறிப்பு, கடந்த 20 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

புது டெல்லி டிசிபி-யின் அதிகாரபூர்வ அறிக்கையில், "உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்போது, ​​போராட்டக்காரர்கள் அதைச் சீர்குலைக்க முயன்றனர், இதனால் சிறிய குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும், காவல்துறை மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்து, முழு செயல்முறையையும் பாதுகாப்பாகச் செய்து முடித்தது. ஜந்தர் மந்தரில் இருக்கும் போராட்டக்காரர்களைக் கூடிய விரைவில் அமைதியான முறையில் இடத்தைக் காலி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டது இதுவே முதல் முறை. அவரது உடல்நிலை மோசமடைந்தால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நீதிமன்ற உத்தரவு தெரிவித்தது.

வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்பு, அவருக்கு கட்டாயமாக உணவு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மருத்துவர்கள் தரும் பரிந்துரை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ஜூலை 20ஆம் தேதி பேரணி நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக இந்தப் பேரணி திட்டமிடப்பட்டிருந்தது.

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்

பட மூலாதாரம், Getty Images

சோனம் வாங்சுக் தனது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது முதல் 9 கிலோவுக்கும் அதிகமாக உடல் எடையை இழந்துள்ளார். விரைவில் உறுப்புகள் சேதமடையும் அபாயமுள்ள ஆபத்தான கட்டத்தை அவர் அடையக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் 19வது நாளில், சோனம் வாங்சுக்கின் ஆரோக்கியம் குறித்து தகவல் அளித்த மருத்துவர் சதீஷ் லம்பா, அவர் மனரீதியாக விழிப்புடன் இருப்பதாகவும், அவரது மருத்துவ நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், அவரது உடல்நிலையில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மருத்துவர்கள் அவரது நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

 புது டெல்லி துணை ஆணையர் சச்சின் சர்மா

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை காவல்துறை பின்பற்றியுள்ளது என்று புது டெல்லி துணை ஆணையர் சச்சின் சர்மா கூறினார்.

மருத்துவமனை அறிக்கை கூறுவது என்ன?

கடந்த 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து மதியம் 3.30 மணியளவில், மருத்துவ அறிக்கையை சஃப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்டது.

அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "சோனம் வாங்சுக் குளுகோஸ் மூலமாகவோ அல்லது வாய் வழியாகவோ எந்தவொரு திரவ உணவையும் உட்கொள்ள மறுத்துவிட்டதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக்கின் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும், உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு காணப்படுவதாகவும் சஃப்தர்ஜங் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்குத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பும், உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

சோனம் வாங்சுக்கின் மனைவி கோரிக்கை என்ன?

சனிக்கிழமை ஊடகங்களிடம் பேசிய வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி, "சோனம் உடலில் பொட்டாசியம் அளவு குறைந்துள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எங்களிடம் சொல்லப்பட்டுள்ளது. நேற்று பொட்டாசியம் அளவு 4.3 ஆக இருந்தது, அது இப்போது 2.9 ஆகக் குறைந்துவிட்டது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று இங்குள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர்" என்றார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், "சோனம் வாங்சுக் ஜந்தர் மந்தரில் இருந்து சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இதைப் பற்றி அவருக்கோ அல்லது எனக்கோ தகவல் தெரிவிக்கப்படவில்லை. நேற்று மாலைதான் சஃப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தார்கள், அப்போது அவரது உடல்நிலை சீராகவே இருந்தது" என்று கூறினார்.

மேலும், "சோனம் பேரணியில் பங்கேற்க முடியாவிட்டால், அவருக்குப் பதிலாக நானே அந்தப் பேரணிக்குத் தலைமை தாங்குவேன். முன்னரே திட்டமிட்டபடி திங்கள் கிழமை இந்தப் பேரணி நடைபெறும். சோனம் வலுக்கட்டாயமாக இங்கே கொண்டு வரப்பட்டார் என்பதற்காக, பேரணியை நிறுத்த முடியாது" என்று கூறினார்.

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, வாங்சுக் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜந்தர் மந்தரில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் விமர்சித்துள்ளார்.

சஞ்சய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "இது என்ன மாதிரியான அராஜகம்? மோதிஜி, அதிகாரத்தின் இந்த ஆணவம் நீண்ட காலம் நீடிக்காது. கடந்த 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக்கின் கோரிக்கைகளைக் கேட்பதற்குப் பதிலாக, அவர் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று எழுதியுள்ளார்.

சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்கு சமாஜ்வாதி கட்சி எம்பி டிம்பிள் யாதவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து டிம்பிள் யாதவ் கூறுகையில், "சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டிருப்பது வெறும் நடவடிக்கை மட்டுமல்ல, அது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நசுக்கும் செயல். பாஜக அரசு இப்போது அமைதியான போராட்டங்களைக் கூட பொறுத்துக் கொள்வதில்லை. இது சர்வாதிகாரம்" என்று தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தரில் இருந்த ஒருவர் செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யிடம் கூறுகையில், "அதிகாலையில், இவர்கள் 10 போலீசாரை மருத்துவர்கள் குழு என்று கூறி உள்ளே அனுப்பினர். அவர்கள் மருத்துவர்கள் போல் இல்லாததால், நாங்கள் அவர்கள் போலீசார் என்று நினைத்தோம்" என்றார்.

"அவர்கள் அனைத்து தன்னார்வலர்களிடமும், 'நீங்கள் இந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள்' என்று கூறினர். அதற்கு தன்னார்வலர்கள், 'சோனம் ஜிக்கு காலை 8.45 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும். அந்த நேரத்தில் வாருங்கள்' என்று தெரிவித்தனர்.

ஆனால் திடீரென அவர்கள், 'உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கிறது. சோனம் ஜியை அழைத்துச் செல்ல வேண்டும்' என்று கூறத் தொடங்கினர்"என்றார்.

சோனம் வாங்சுக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி

ஜந்தர் மந்தரில் இருந்து அகற்றப்படுவதற்கு முன் வாங்சுக் என்ன கூறினார்?

வெள்ளிக்கிழமை, தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் 20-வது நாள் முடிவில் வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்றில், பொதுமக்களின் பங்கேற்பே இந்த இயக்கத்தின் மிகப்பெரிய பலம் என்று கூறி, ஜூலை 20 அன்று நடைபெறும் சிஜேபி-யின் நாடாளுமன்ற பேரணியில் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு வாங்சுக் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

"ஆம், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். எனது உடலின் 20 சதவீதம் அழிந்துவிட்டது. முதலில் கொழுப்பு குறைந்தது, பின்னர் தசைகள். அதன் பிறகு உறுப்புகள் பாதிக்கப்படும். இறுதியாக மூளை. அந்த நேரம் இன்னும் வரவில்லை" என்று வாங்சுக் கூறியிருந்தார்.

தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளிக்கும் விதமாக, "20-வது நாள் முடியப்போகிறது. எனது மூளை இன்னும் சரியாக வேலை செய்கிறது என்பதை நான் நிரூபிக்க விரும்புகிறேன்" என்றும் வாங்சுக் கூறியிருந்தார்.

இந்த இயக்கம் பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்குமா அல்லது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு வழிவகுக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு, மக்கள் பெரும்பாலும் மக்கள் இயக்கங்களின் சக்தியைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்று வாங்சுக் கூறினார்.

அவர், "நான் உங்களிடம் கேட்கிறேன், இந்திய மக்கள் தங்கள் குழந்தைகளின் உயிரையும் கல்வியையும் அதிகம் நேசிக்கிறார்களா அல்லது வெங்காயத்தை அதிகம் நேசிக்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த காலத்தில், வெங்காய விலை உயர்வுக்கு எதிரான பொதுமக்களின் கோபத்தால் அரசாங்கங்கள் கவிழ்ந்துள்ளன என்பதை வாங்சுக் நினைவூட்டினார்.

"பொதுமக்களின் இயக்கங்களால் இந்தியாவில் மூன்று முறை அரசாங்கங்கள் கவிழ்ந்துள்ளன. 1980-ல் ஒருமுறை மத்திய அரசு கவிழ்ந்தது. 1998-ல் டெல்லி அரசு கவிழ்ந்தது. அதே ஆண்டில் ராஜஸ்தான் அரசும் கவிழ்ந்தது. அந்த இயக்கம் எதைப் பற்றியது? வெங்காய விலையைப் பற்றியது" என்றும் அவர் கூறியிருந்தார்.

நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் தேர்வு முறையில் விரிவான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது.

சோனம் வாங்சுக் ஜூன் 28 அன்று இந்த இயக்கத்தில் இணைந்தார், அன்றிலிருந்து அவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு