சோவியத் அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கி 36 ஆண்டுகளான பிறகும் விலகாத அச்சம்

பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
1989-இல் நார்வே கடற்கரை அருகே 'கொம்சோமோலெட்ஸ்' (Komsomolets) நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதில் உள்ள டார்பிடோக்களில் இருக்கும் அபாயகரமான புளூட்டோனியத்தை சீல் செய்யும் திட்டங்கள் குறித்து பிபிசி செய்தி வெளியிட்டது.
"நார்வே கடலின் அடியில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு டைம் பாம் தான் கொம்சோமோலெட்ஸ். இது தொடர்பாக நாம் விரைவாக ஏதாவது செய்யாவிட்டால், அனைவருக்கும் ஆபத்து தான்," என 1993-ஆம் ஆண்டு பிபிசி செய்தியில், மூழ்கிய சோவியத் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் அபாயம் குறித்து ரஷ்ய கிரீன்பீஸ் ஆர்வலர் டிமிட்ரி லிட்வினோவ் விவரித்திருந்தார்.
தீ விபத்து காரணமாக 1989இல் மூழ்கிய கொம்சோமோலெட்ஸ், நார்வே கடற்கரைக்கு அருகே கடலில் ஒரு மைல் (1.6 கி.மீ) ஆழத்தில் கிடப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியது. அதனுள்ளே இருந்த இரண்டு அணு ஆயுத டார்பிடோக்கள் துருப்பிடிக்கத் தொடங்கியதால், அதிலிருந்து சுமார் 4 கிலோ புளூட்டோனியம் நார்வே கடலில் கலக்கும் அபாயம் உருவானது.
அதிநவீன சோவியத் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட கொம்சோமோலெட்ஸ், அதிக ஆழத்திற்குச் செல்லும் திறன் கொண்ட ஒரு தனித்துவமான கப்பலாகும். மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல்களின் வரிசையில் இதுவே முதலாவதாக இருக்கும் என நேட்டோவால் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதுபோன்ற வேறு கப்பல்கள் உருவாக்கப்படவில்லை.
1994-ல் வெளியான பிபிசி ஹொரைஸன் ஆவணப்படத்தின்படி, "கொம்சோமோலெட்ஸ் சோவியத் யூனியனின் ரகசியமான, வெல்ல முடியாத ஆயுதமாக இருந்திருக்க வேண்டிய ஒன்று. மேற்கத்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்படும் ஆழத்தை விட இரு மடங்கு ஆழத்தில், அதாவது 1,000 மீட்டர் ஆழத்தில் சென்று அணு ஏவுகணைகளை செலுத்தக்கூடிய உலகின் ஒரே நீர்மூழ்கிக் கப்பல் அதுதான். ஆனால், இன்று கொம்சோமோலெட்ஸ் ஒரு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பேரழிவாக மாறியுள்ளது."
விபத்தின் போது என்ன நடந்தது?

1989 ஏப்ரல் 7-ஆம் தேதி கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டபோது, மாலுமிகள் போராடி கப்பலை நீரின் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்தனர். ஆனால், 5 மணி நேரம் மட்டுமே மிதந்த இந்தக் கப்பல் மீண்டும் கடலுக்குள் மூழ்கியது. அதிலிருந்த 69 மாலுமிகளில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கப்பல் மூழ்கியபோது, உள்ளே சிக்கியிருந்த 5 மாலுமிகளுடன் ஒரு அவசர காலத்தில் தப்பிக்கும் கலன் (Escape pod) கடலின் மேற்பரப்பிற்கு வேகமாகத் தூக்கி எறியப்பட்டது. ஆனால், அதனுள் கடல்நீர் நிரம்புவதற்குள் ஒருவரால் மட்டுமே தப்பித்து வெளியே வர முடிந்தது.
நார்வே கடலடியில் இந்தக் கப்பல் பலமாக மோதியபோது ஏற்பட்ட பயங்கர வெடிப்பில், அதன் வலுவான டைட்டானியம் மேலோடு கிழிந்து கடல்நீர் நேரடியாக அணு ஆயுதங்களுக்குள் புகுந்தது. இந்த வெடிப்பின் காரணமாக, கப்பலின் மேலோடு "கண்ணாடி போல சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருந்ததை" ரஷ்ய கடல் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்தனர்.
இந்த விபத்துக்குப் பிறகு என்ன செய்வது என்பது குறித்து விஞ்ஞானிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவின. கப்பலை வடிவமைத்த ரூபின் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ரஷ்ய விஞ்ஞானி இகோர் ஸ்பாஸ்கி 1993-ல் பிபிசியின் பென் பிரவுனிடம் பேசுகையில், "இது அத்தனை பெரிய பேரழிவு அல்ல" என்றார். இருப்பினும், அந்த நீர்மூழ்கிக் கப்பலை கடலில் இருந்து எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.
"உப்பு நீரின் மின்வேதியியல் (electrochemical) தாக்கத்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கப்பலில் உள்ள இரண்டு அணு ஆயுதங்களும் முழுமையாகத் துருப்பிடித்துவிடும். அதன்பிறகு, அதிலிருக்கும் கொடிய நச்சுத்தன்மை கொண்ட புளூட்டோனியம் சுற்றுச்சூழலில் கலக்கத் தொடங்கிவிடும்," என்று அவர் எச்சரித்திருந்தார்.
"சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, அப்படி ஒரு கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டால் உயிரிழந்த அந்த மாலுமிகள் மட்டுமே இதற்குப் பலிகடாக்களாக இருக்க மாட்டார்கள். மீன்வளம் மிகுந்த இப்பகுதி கடுமையான கதிர்வீச்சுக்கு ஆளாகும் என்பதால், ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்," என்று பிபிசி செய்தியாளர் பென் பிரவுன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதனால் மீன்பிடிப் பகுதிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று 1993-ல் சர்வதேச விஞ்ஞானிகள் குழு வெளியிட்ட ஓர் அறிக்கை முடிவுக்கு வந்தது.
இதுகுறித்த முரண்பாடான கருத்துகள் ஒருபுறம் இருந்தாலும், கதிர்வீச்சுப் பாதிப்பைக் குறைப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. கதிரியக்கப் பொருட்கள் கசிவதைத் தடுப்பதற்காக, 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் அதிநவீன ஆழ்கடல் பொறியியல் மூலம் கப்பலின் விரிசல்களும் டார்பிடோ குழாய்களும் முழுமையாக அடைத்து சீல் வைக்கப்பட்டன. இந்தப் பணிகள் முடிவடைந்து 30 ஆண்டுகள் (ஜூலை 1996) ஆகிவிட்டன. சீல் வைக்கப்பட்ட அந்தப் பகுதிகள் அதிகபட்சம் 30 ஆண்டுகள் மட்டுமே தாங்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கப்பலில் இருந்து மீண்டும் கசிவு ஏற்படுவதை நார்வே அரசாங்கத்தின் சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
'மிகப்பெரிய அச்சுறுத்தல்'
2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான ஓர் ஆய்வறிக்கையின்படி, டார்பிடோக்கள் சீல் செய்யப்பட்டிருந்தாலும், நீர்மூழ்கியின் அணுஉலை மெல்லமெல்லச் சிதைவடைந்து வருவதாகவும், அதிலிருந்து அவ்வப்போது கதிரியக்கப் பொருட்கள் கடலில் வெளியேறுவது கண்கூடாகத் தெரிவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கசிவு தொடர்ந்து நிகழவில்லை என்றாலும், கப்பலின் மேலோட்டில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களில் இருந்து அவ்வப்போது வெடிப்புகள் போலவும், காற்றோட்டக் குழாயில் இருந்து மேகம் போலவும் கசிவுகள் வெளியேறுவதாக நார்வே கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி பாதுகாப்பு ஆணையக் (டிஎஸ்ஏ) குழு தெரிவித்துள்ளது.
எனினும், தற்போதைய கதிர்வீச்சு அளவுகள் ஆபத்தானவை என்று அவர்கள் கருதவில்லை. "அணு உலையிலிருந்து வெளியேறும் இந்தக் கதிரியக்கப் பொருட்கள், சுற்றியுள்ள கடல் சூழலில் பெரிய அளவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை" என்கிறார் டிஎஸ்ஏ-இன் சர்வதேச அணுசக்தி பாதுகாப்புத் துறையின் பொறுப்பு இயக்குநர் இங்கார் அமுண்ட்சென்.
ஆனால், இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அந்த நீர்மூழ்கிக் கப்பலின் அணு உலை மற்றும் அணு ஆயுதங்கள் இரண்டுமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டென்சன் எச்சரிக்கிறார்.
காலப்போக்கில் கப்பல் துருப்பிடிப்பதால் தற்போதைய கதிர்வீச்சு அளவுகள் மோசமாகலாம் என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "இது கப்பலின் சிதைவைச் சுற்றியுள்ள கடல்நீரின் ஆக்ஸிஜன் அளவு மற்றும் சீல் செய்யப்பட்ட பகுதியின் தற்போதைய நிலை ஆகியவற்றைப் பொறுத்தது" என்றார்.

கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்களாலும், கதிரியக்கப் பொருட்கள் எவ்வளவு விரைவாக வெளியேறி, மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மூலமாக மனிதர்களின் உணவுச் சங்கிலிக்குள் நுழையக்கூடும் என்பதையும் அவர் முக்கியக் காரணியாகச் சுட்டிக்காட்டுகிறார்.
"இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏற்கனவே ஒருமுறை சீல் வைக்கப்பட்டுள்ளது என்பதே, இதிலிருக்கும் அபாயத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்வதற்குச் சமம்" என்று கிறிஸ்டென்சன் கூறுகிறார்.
"அணு எரிபொருள் நேரடியாகக் கடல்நீருடன் கலந்து சிதைவடைந்து வருகிறது. இந்தக் கசிவுகளுக்கான உண்மையான காரணங்கள், துருப்பிடிக்கும் செயல்முறைகள் மற்றும் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளக் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்கிறார் அமுண்ட்சென்.
ஆனால் இது இப்போதைக்குச் சாத்தியமில்லை. "சுமார் 1,700 மீட்டர் ஆழத்தில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் இருப்பதால், எந்தவொரு மீட்பு நடவடிக்கையும் எடுப்பது மிகவும் சிரமம். தற்போதைக்கு அப்படி எந்தத் திட்டமும் இருப்பதாகவும் எங்களுக்குத் தெரியவில்லை."
இதைத் தடுக்க இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கிறிஸ்டென்சன் வாதிடுகிறார்.
"கப்பலின் தற்போதைய நிலைமையை அறிய குறைந்தபட்சம் ஒரு புதிய ஆய்வாவது உடனடியாக நடத்தப்பட வேண்டும். 24,000 ஆண்டுகள் அரை ஆயுளைக் (half-life) கொண்ட புளூட்டோனியம், மனித சமூகத்திற்கு எப்போதுமே ஒரு நிரந்தர ஆபத்தாகவே இருக்கும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























