சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மத்திய இணையமைச்சரின் மகன் கைது - மோதி சென்ற பின் வேகமாக மாறிய காட்சிகள்

    • எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா & பிரவீன் ஷுபம்
    • பதவி, பிபிசி தெலுகு
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்தை தெலங்கானா காவல்துறை கைது செய்துள்ளது.

போக்சோ சட்டத்தின் (POCSO) கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான பண்டி சாய் பகீரத், சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக சைபராபாத் காவல் ஆணையர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

"மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, பகீரத் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்; நீதிபதி அவரை நீதிமன்றக் காவலில் வைத்தார்," என்று காவல் ஆணையர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

"குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம். கரீம்நகர், டெல்லி மற்றும் பிற இடங்களுக்குக் போலீஸ் குழுக்களை அனுப்பினோம். குற்றம் சாட்டப்பட்டவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் நாங்கள் சோதனை நடத்தினோம். நாங்கள் லுக்-அவுட் நோட்டீஸையும் (நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில்) வெளியிட்டோம்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்சிங்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சிரேவுலா அருகே உள்ள தொழில்நுட்ப பூங்காவில், சைபராபாத் சிறப்புப் போலீஸ் குழு அவரைக் கைது செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவரான பண்டி பகீரத் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் வெளியிட்ட அறிக்கையில், தனது மகன் சரணடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

"சட்டம் மற்றும் நீதித்துறையின் மீது நம்பிக்கை கொண்டு, இன்று எனது மகன் பண்டி பகீரத் தனது வழக்கறிஞர்களுடன் விசாரணைக்காகத் தெலங்கானா காவல்துறையின் முன் ஆஜரானார்," என்று பண்டி சஞ்சய் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பகீரத்தின் வழக்கறிஞர் கருணாசாகர், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "நானும் மூத்த வழக்கறிஞர் அந்தோணி ரெட்டியும், தொழில்நுட்ப பூங்கா அருகே பகீரத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்தோம்," என்று தெரிவித்தார்.

இதுவரை நடந்தது என்ன?

போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பண்டி பகீரத்தை, மே 13-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பெட் பஷீராபாத் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு காவல்துறை மே 12-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

பகீரத் வீட்டில் இருந்ததால், அந்த நோட்டீஸ் அவருடைய மாமா வம்சி கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆனால், பகீரத் விசாரணைக்கு ஆஜராகவில்லை. காவல்துறையின் கூற்றுப்படி, மே 13-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக தனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தேவை என்று குறிப்பிட்டு, பண்டி பகீரத் பெட் பஷீராபாத் காவல்துறைக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

"போதுமான ஆதாரங்களுடன் நான் உங்கள் முன் ஆஜராகி, எனது வாதங்களை முன்வைப்பேன்," என்று பண்டி பகீரத் காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.

மேட்சல் காவல் உதவி ஆணையர் சங்கர் ரெட்டி பிபிசியிடம், "பகீரத்தைத் தேடுவதற்காக நாங்கள் ஐந்து குழுக்களை அமைத்திருந்தோம். நாங்கள் ஹைதராபாத், டெல்லி மற்றும் கரீம்நகரில் தேடி வந்தோம்," என்று கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பண்டி பகீரத் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஹைதராபாத் காவல்துறை தெரிவித்திருந்தது.

இவ்வழக்கில் பகீரத் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

மாநில அரசியலில் என்ன பேசப்படுகிறது?

இந்த முழு விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியான கருத்துகள் தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையில், மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பிஆர்எஸ் (பாரத் ராஷ்டிர சமிதி), பண்டி சஞ்சயின் மகனான பகீரத்தை கைது செய்யுமாறு வலியுறுத்தி வந்தது. அதே வேளையில், விசாரணை எவ்விதப் பாரபட்சமுமின்றி நடத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்தது.

ஆனால், இந்த விவகாரத்துக்கும் பண்டி சஞ்சய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக கூறுகிறது.

கரீம்நகரில் நடைபெற்ற இந்து ஏக்தா யாத்திரையின் போது, ​​"தன் மகனுக்குப் போதுமான நேரத்தை ஒதுக்காதது தனது தவறுதான்," என்று பண்டி சஞ்சய் கூறினார்.

போலீஸ் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது என்ன?

முன்னதாக, பெட் பஷீராபாத் காவல்துறையினர், பண்டி பகீரத்தை விசாரணைக்காக ஆஜராகுமாறும், அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும், போக்சோ சட்டத்தின் கீழ் அவருக்கு ஒரு நோட்டீஸை அனுப்பியிருந்தனர்.

பகீரத்துக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸில், அப்பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு, அதற்கு முன்னதாகப் பதிவு செய்யப்பட்டிருந்த பிரிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த நோட்டீஸில், "2012-ஆம் ஆண்டின் போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 74, 75, 11 மற்றும் 12-இன் கீழ், முதல் தகவல் அறிக்கை எண் 684/2026, பிஎன்எஸ் வாயிலாக, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எதிராக இந்தக் காவல் நிலையத்தில் நாங்கள் ஒரு குற்றவியல் வழக்கைப்பதிவு செய்துள்ளோம். பின்னர், 'பாதிக்கப்பட்டவரின்' வாக்குமூலத்தின் அடிப்படையில், இவ்வழக்கு போக்சோ சட்டத்தின் பிரிவு 5(l)-உடன் இணைந்த பிரிவு 6-ன் கீழ் மாற்றப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்பெண்ணின் வாக்குமூலம், மே 12 அன்று காவல் துணை ஆணையர் ரித்திராஜ் தலைமையிலான குழுவால் பதிவு செய்யப்பட்டது.

போக்சோ சட்டத்தின் 2019 ஆம் ஆண்டு திருத்தத்தின்படி, பிரிவு 5-இன் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது மரண தண்டனை விதிக்கப்படவும் வழிவகை செய்கிறது.

"என் மகன் தவறு செய்திருந்தால் மன்னிக்க மாட்டேன்"

தனது மகனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கு குறித்து, மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கரீம்நகரில் நடைபெற்ற இந்து ஏக்தா யாத்திரையின்போது, ​​அவர் இப்பிரச்னை குறித்துப் பேசினார். அவர் கூறுகையில், "இது என்னுடைய தவறு. நான் என் மகனுக்கு நேரம் ஒதுக்கவில்லை. நான் அவனிடம் பேசவில்லை. நீங்கள் என்னை உங்கள் தம்பியாகக் கருதினீர்கள். என் மகனுக்கு நேரம் ஒதுக்காததன் மூலம் நான் ஒரு தவறு செய்துவிட்டேன். உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்" என்றார்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தான் நிரபராதி என நிரூபிக்கப்படுவேன் என்றும் தனது மகன் உறுதியளித்துள்ளதாக பண்டி சஞ்சய் கூறினார்.

"உண்மையாகவே ஏதேனும் தவறு நடந்திருந்தால், என் மகனை நான் மன்னிக்க மாட்டேன். தயவுசெய்து பொய் பரப்புரைகளை நம்பாதீர்," என்று அவர் கூறினார்.

தனக்கு எதிராக சதி செய்பவர்கள், தனது குடும்பத்தை பகிரங்கமாக அவதூறு செய்பவர்கள், கட்சியை நிந்திப்பவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே கோபத்தைத் தூண்டுபவர்களுக்கு இனியும் கருணை காட்ட முடியாது என்று பண்டி சஞ்சய் கூறினார். இத்தகைய நிகழ்வுகளால் தனது மனைவி மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் வருகைக்குப் பிறகு வேகமாக மாறிய காட்சிகள்

மே 8-ஆம் தேதி பெட் பஷீராபாத் காவல் நிலையத்தில் பண்டி பகீரத் மீது ஒரு போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பெட் பஷீராபாத் ஆய்வாளர் விஜய்வர்தன், பிபிசி தெலுங்கிடம் பேசுகையில், "அந்தப் பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பண்டி சாய் பகீரத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.

வழக்கு விவரங்களின்படி, டிசம்பர் 31, 2025 அன்று இரவு, பண்டி சஞ்சயின் மகன் பண்டி சாய் பகீரத் தனது 17 வயது மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அப்பெண்ணின் தாய் தனது புகாரில் குற்றம் சாட்டியிருந்தார்.

வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, அந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் தன்னை 'ஹனிட்ராப்' (பாலியல் ரீதியாக சிக்கவைத்து பணம் பறிக்கும் மோசடி) செய்து, பணத்துக்காகத் துன்புறுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி, பண்டி பகீரத் கரீம்நகர் டூ டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோதி மே 10-ஆம் தேதி ஹைதராபாத்துக்கு வருகை தந்தார். மறுநாளே, அதாவது மே 11-ஆம் தேதி நிகழ்வுகள் மிக வேகமாக மாறின.

பெட் பஷீராபாத் காவல் நிலையத்தில் பண்டி பகீரத் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு குறித்து முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விசாரித்ததுடன், டிஜிபி சி.வி. ஆனந்திடம் இதுகுறித்துப் பேசினார் என்று முதலமைச்சர் அலுவலகம் மே 11-ஆம் தேதி பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "மே 8-ஆம் தேதியே புகார் பெறப்பட்டிருந்தும், ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முதலமைச்சர் டிஜிபியிடம் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோதியின் ஹைதராபாத் வருகையையொட்டி, அனைத்துக் காவலர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக டிஜிபி முதலமைச்சரிடம் தெரிவித்தார்," என்று கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு