கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா - சர்வதேச நிலவரம் என்ன?

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்து, 15 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 40,625 பேர் கொரோனாவால் உயிரித்துள்ளனர்.

எனவே பிரிட்டனுக்கு விமானம் மூலமாகவோ ரயில் மூலமாகவோ பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரிட்டன் அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளார்.

வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்பவர்கள் விமானநிலையத்திலேயே தங்கள் வீட்டு முகவரியை கொடுத்துவிட்டு தான் செல்ல வேண்டும். 14 நாட்களுக்குள் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது. விதிகளை மீறுபவர்களிடம் 1000 பவுண்டுகள் அபராதம் வசூலிக்கப்படும் என பிரிட்டன் அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவரை 2,067 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நாளை முதல் அத்தியாவசிய தேவைகள் அல்லாத வர்த்தகமும் அலுவலகங்களும் இயங்கவுள்ளது. முதற்கட்டமாக நாளை 4 லட்சம் பணியாளர்கள் தங்கள் பணிகளுக்கு திரும்புவார்கள் என நியூயார்க் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே நியூயார்க்கில் மட்டும் 8, 80,000 பேர் வேலை இழந்துள்ளனர் என அமெரிக்க அதிகாரிகள் அளித்த தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,207 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியா வில் சில இடங்களில் முக்கிய வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளனர். சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கு தேவையான எண்ணிக்கையிலான படுக்கை வசதிகள் பல மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சீனாவை மிஞ்சிய மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,975 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம். மும்பையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,774 ஆக உள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 2,969 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5வது நாடாக இந்தியா உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: