You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் வெடித்த வன்முறை - சர்வதேச சமூகத்திற்கு இந்தியா விடுத்த வேண்டுகோள்
பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் திங்கள்கிழமை அன்று, தடை செய்யப்பட்ட அமைப்பான ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டியின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
செய்தி முகமையான ராய்ட்டர்ஸ், 11 பேர் கொல்லப்பட்டதாகவும் 70 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏஎஃப்பி, ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டியின் ஆதரவாளர்கள் கூடுதல் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைக் கோரி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியே ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் (ஜேஏஏசி) கமிட்டி மக்கள் திரண்டிருந்தபோது இந்த மோதல் தொடங்கியது. அந்த நபர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.
பூஞ்ச் செக்டார் கமிஷனர் சர்தார் வாஹித் கான் செய்தி முகமையான ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், கலவரக்காரர்களின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீஸ் அதிகாரிகளும் ஒரு வழிப்போக்கரும் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய எதிர் துப்பாக்கிச் சூட்டில் ஆறு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
திங்கள்கிழமை நடந்த சம்பவத்தில் 23 பாதுகாப்புப் படை வீரர்களும் 50 போராட்டக்காரர்களும் காயமடைந்ததாக லியாகத் மாலிக் தெரிவித்தார். 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏன் போராட்டங்கள் நடக்கின்றன?
ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி தலைவர் ஷவ்கத் நவாஸ் மீர், சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "ராவலகோட்டில் நம் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்த மாவட்டத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜூன் 9 அன்று திட்டமிடப்பட்டுள்ள முழு அடைப்பை வெற்றிகரமாக மாற்ற தங்கள் அமைப்பு ஒற்றுமையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இதற்குப் பதில் அளித்த கமிஷனர் கான், "ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி இதை இனப்படுகொலை என்று கூறி மக்களை தவறாக வழிநடத்துகிறது. அரசின் நடவடிக்கையின் நோக்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மட்டுமே ஆகும்" என்றார்.
பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றபோது, அமைப்பின் தொண்டர்கள் தானியங்கி துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார்.
இந்த பிராந்தியத்தின் சட்டமன்றத்திற்கு ஜூலை 27 அன்று நடக்கவிருக்கும் தேர்தலில், அகதிகளுக்காக 12 இடங்களை ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேஏஏசி இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சட்டமன்றத்தின் மொத்தம் 45 இடங்களுக்குத் தேர்தல் நடக்க உள்ளது.
பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் சட்டமன்றத்தில் ஒதுக்கப்படும் இடங்களின் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது இந்த கூட்டணியின் கோரிக்கையாகும்.
பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் வசிக்காமல், பாகிஸ்தானின் பிற பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்த வேட்பாளர்கள் இந்த இடங்களில் போட்டியிடுகிறார்கள்.
பிபிசி நியூஸ் உருது செய்தியின்படி, செவ்வாய்க்கிழமை அன்று ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் நெடும் பயணத்தைத் (லாங் மார்ச்) தொடங்கியது.
உள்ளூர் போலீசாரின் கூற்றுப்படி, இந்த நீண்ட நடைப்பயணத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம் ஆகும்.
ஒரு போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, போராட்டக்காரர்கள் பர்னாலா, கோட்லி, பாலந்திரி மற்றும் பிற பகுதிகளில் இருந்து மிர்பூர் மற்றும் ராவலகோட்டை வந்தடைகிறார்கள், அதே நேரத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் சாலைகள் மற்றும் பிற பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மிர்பூரிலிருந்து ராவலகோட்டிற்குத் தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள், அங்கிருந்து அவர்கள் முசாஃபராபாத் நோக்கிச் செல்வார்கள்.
முசாஃபராபாத்தில், ஜேஏஏசியின் அழைப்பின் பேரில் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.
இவ்விவகாரம் குறித்து இந்தியா கூறுவது என்ன?
பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் நடந்துள்ள இந்த வன்முறை குறித்து இந்தியா எதிர்வினையாற்றியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் அது தொடர்பான பிற சிக்கல்கள் குறித்த அறிக்கைகளை நாங்கள் பார்த்துள்ளோம். இந்தச் சூழலில், பாகிஸ்தானில் இருந்து பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் தவறான வீடியோக்களின் ஒரு வடிவத்தை நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம்." என்றார்.
"பாகிஸ்தான் தனது தோல்விகளை மூடிமறைக்கவும், மனித உரிமை மீறல்களிலிருந்து கவனத்தைத் திருப்பவும் இந்த விரக்தியான முயற்சியை மேற்கொள்வது போல் தெரிகிறது." எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவரது பதிவில் "நீங்களும் பார்த்திருக்கலாம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசாரின் கொடூரமான அத்துமீறல்கள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. செய்திகளின்படி, பல மக்கள் உயிரிழந்துள்ளனர், அதே நேரத்தில் ஏராளமான மக்கள் காயமடைந்துள்ளனர். சர்வதேச சமூகம் பாகிஸ்தானை அதன் செயல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்பேற்கச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு