'16 ஆண்டுகளாக பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட உடல்': இறப்புக்குப் பின்னும் செல்வாக்குடன் திகழ்ந்த ஆர்ஜென்டினா முதல் பெண்மணியின் கதை

எவா பெரான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் சங்கடம் ஏற்படுத்தலாம்.

ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற முதல் பெண்மணி 1952 ஜூலையில் காலமானார். அதற்கு 60 ஆண்டுகள் கழித்து அவருடைய உடல் விநோதமான முறையில் காணாமல் போனது பற்றியும் உலகைச் சுற்றிய அதன் 16 ஆண்டுகால பயணம் பற்றியும் பிபிசி மறுபதிவு செய்தது.

1952-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி எவா பெரான் மரணமடைந்த சில நேரத்தில் மருத்துவர் பெட்ரோ ஆரா தனது பணியைத் தொடங்கினார். லெனின் மற்றும் ஸ்டாலினின் உடல்களை ரஷ்யர்கள் பாதுகாத்து வைத்திருந்த அதே முறையில், ஆர்ஜென்டினாவின் முதல் பெண்மணியின் உடலையும் பதப்படுத்தி வைக்கும் பணி அந்தப் புகழ்பெற்ற ஸ்பானிய உடற்கூறியல் நிபுணரிடம் ஒப்படைக்கப்பட்டது. விடா என அன்போடு அழைக்கப்பட்ட அவருடைய உடல் தொழிலாளர் அமைச்சகக் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்களுக்கான நினைவுச் சின்னம் ஒன்று அங்கே அமைக்கப்படவிருந்தது. அதன் அடிப்பகுதியில் இருந்த ஒரு கண்ணாடிப் பெட்டி அவரது இறுதி ஓய்விடமாக அமையவிருந்தது.

எனினும் அதற்கு மூன்று ஆண்டுகள் கழித்து 1955-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவருடைய கணவரும் அதிபருமான ஜுவான் பெரோன் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு நாட்டை விட்டுச் சென்றார். புதிய அரசு எவா பெரோனின் உடலைத் திருட முடிவெடுத்தது. அதிலிருந்து தான் 16 ஆண்டுகால அசாத்தியமான பயணம் தொடங்கியது. அவருடைய ராணுவ உளவுப் பிரிவு மையத்திலும், ஒரு வேனிலும், மிலானில் புதைக்கப்பட்டு, மேட்ரிட்டுக்கு எடுத்து வரப்பட்டும் இருந்த நிலையில் இறுதியாக பியூனஸ் அயரஸில் பலமாக பாதுகாக்கப்பட்ட ஓர் இடத்தில் வைக்கப்பட்டது.

தனது 33வது வயதில் கருப்பை வாய் புற்றுநோயால் வா பெரோன் உயிரிழந்த பிறகு அவரது உடலைப் பதப்படுத்தி வைக்க அவருடைய கணவருக்கு அரசியல் காரணங்கள் இருந்தன. அவருடைய ஏழ்மையான கிராமப்புற பின்னணியும் முதல் பெண்மணியாக அவர் செய்த தொண்டு பணிகளும் உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் அவருக்கு பலமான ஆதரவு தளத்தைப் பெற்றுத் தந்திருந்தது.

"உடலைப் பாதுகாப்பதன் மூலம் அவர் தன்னை பாதுகாக்க விரும்பினார்," என பெரோனிச வரலாற்றாசிரியரான ஃப்ளாவியா ஃபியோருக்கி 2012-ஆம் ஆண்டில் பிபிசியிடம் தெரிவித்தார். மேலும் அவர், "அதோடு பெரோன் மற்றும் பெரோனிசம் குறியீடுகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் பொருத்தது. எவிடாவும் ஒரு குறியீடு தான்." என்றார்.

அவர் இறந்த அடுத்த சில வாரங்களில் அது தெளிவானது பாரஃபின் மற்றும் கிளிசரின் ஊசி செலுத்தும் முறையைப் பயன்படுத்தி, எவிடாவின் உடலை உயிருடன் இருப்பது போன்ற நிலையில் பதப்படுத்த மருத்துவர் ஆராவால் முடிந்தது. அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத்தில் 14 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது சவப்பெட்டியை இருபது லட்சம் பேர் பார்வையிட்டனர். அவர் உயிருடன் இருந்தபோது மக்களிடையே ஏற்படுத்தியிருந்த பற்றுறுதி, அவரது மறைவுக்குப் பிறகும் தொடர்ந்தது.

எவா பெரான்

பட மூலாதாரம், Getty Images

மேலும், அடுத்த 16 ஆண்டுகளில் எவிடாவின் உடல் மேற்கொண்ட நீண்ட பயணத்துக்குக் காரணம் அதன் குறியீட்டு முக்கியத்துவமே ஆகும். 1955-ஆம் ஆண்டில் பெரோன் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டபோது, ​​ஜெனரல் பெட்ரோ அரம்புரு தலைமையிலான சர்வாதிகார ஆட்சி பெரோனிசத்தின் அனைத்து அம்சங்களையும் ஒடுக்க முற்பட்டது. அத்துடன், பெரோனின் உடல் எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு குறியீடாக மாறிவிடக்கூடும் என்றும் அது அஞ்சியது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பெரோனிஸ்டுகள் அதை மீட்க முயற்சி செய்யலாம் என்ற அச்சத்தில், ராணுவப் புலனாய்வுத் துறையின் தலைவரான லெப்டினன்ட் கர்னல் கார்லோஸ் மூரி கோனிக், அதை பியூனஸ் அயர்ஸ் முழுவதும் இடம் மாற்றிக்கொண்டே இருந்தார். எவிடாவின் உடல் தலைநகரின் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேனிலும், திரையரங்குத் திரைக்குப் பின்னாலும், நகரின் நீர் விநியோக நிலையத்துக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது உடல் எங்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், அங்கு மலர்களும் மெழுகுவர்த்திகளும் தோன்றின.

பின்னர் கோனிக் அந்த உடலைத் தனது அலுவலகத்துக்கு மாற்றினார். அங்கு அவர் சவப்பெட்டியை நேராக நிறுத்தி பார்வையாளர்களுக்கு காண்பித்ததாகக் கூறப்படுகிறது. அவரது சடலத்தின் மீது கோனிக்குக்கு அதீதமான ஈடுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. "அவரை எனக்கு ராணுவப் பள்ளியிலிருந்தே தெரியும். அவர் முற்றிலும் இயல்பானவராகவே இருந்தார். ஆனால் அந்த உடலைக் கையில் எடுத்த பிறகு, அவர் பைத்தியம் பிடித்தவர் போலாகிவிட்டார்," என்று 1997-ஆம் ஆண்டில் வெளியான 'எவிடா, தி கிரேவ் வித் நோ பீஸ்' (Evita, the grave with no peace) என்ற ஆவணப்படத்தில் கர்னல் ஹெக்டர் கபனிலாஸ் கூறினார்.

"எவிடா தொடர்பான கதைகளில் புராணக் கதைகளும் வரலாறும் தொடர்ந்து ஒன்றோடொன்று கலந்திருப்பதால்" உண்மையை அறிந்துகொள்வது கடினம் என்று குறிப்பிட்ட ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த கல்வியாளர் செசிலியா மேகான், 2012-ஆம் ஆண்டில் பிபிசியிடம் ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார். அதன்படி, 1957-ஆம் ஆண்டில் தனது பணியிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு, கோனிக் என்பவர் தனது பாதுகாப்பில் இருந்த அந்தப் பெண்மணி மீது ஈர்ப்பு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், 1957-ஆம் ஆண்டில் இத்தாலிக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, எவா பெரானின் உடலை மறைத்துவிடும் பணி கபனிலாஸிடம் ஒப்படைக்கப்பட்டது. மிலான் நகரில் உள்ள ஒரு கல்லறையில், 'மரியா மாகி டி மஜிஸ்ட்ரிஸ்' என்ற பெயரில் எவிடா அடக்கம் செய்யப்பட்டார்.

எனினும், அவரது ஆதரவாளர்கள் அவரை மறக்கவில்லை. பியூனஸ் அயர்ஸ் நகரில் "எவா பெரானின் உடல் எங்கே?" என்று கேட்கும் வகையிலான சுவரெழுத்துகள் தோன்றின. அந்த உடலைத் திரும்பப் பெறுவது என்பது ஆர்ஜென்டினாவில் உள்ள பெரோனிஸ்டுகளின் ஒரு முக்கிய முழக்கமாக மாறியது.

எவா பெரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற அரசு மரியாதையுடனான இறுதிச் சடங்கின்போது, ​​ஆர்ஜென்டினாவின் முதல் பெண்மணி எவா பெரானின் (1919 - 1952) சவப்பெட்டியின் அருகே கூடியிருந்த மக்கள்.

நாடு திரும்பிய உடல்

எவிடாவின் உடலை ராணுவமே மறைத்தது என்ற உண்மை, அதன் வீரியத்தை மேலும் அதிகரித்ததாக ஃபியோருச்சி கருதுகிறார். "எவிடாவின் சடலத்தின் மீது இழைக்கப்பட்ட வன்முறை, தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியின் குறியீடாகவும் அமைந்திருந்தது." என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

1971-இல், ஆர்ஜென்டினாவை மீண்டும் ஜனநாயக ஆட்சிக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய நிர்வாகம், பெரோனிஸ்டுகள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன், எவிடாவின் உடலை ஜுவான் பெரோனிடம் திருப்பித் தரவும் ஒப்புக்கொண்டது. நாடுகடத்தப்பட்ட நிலையில் தனது மூன்றாவது மனைவியான இசபெல்லுடன் வசித்து வந்த முன்னாள் சர்வாதிகாரியின் மாட்ரிட் புறநகர் இல்லத்துக்கு, அவரது உடல் வெள்ளி சவப்பெட்டியில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது.

அக்காலத்தில் யுவான் பெரோனின் நம்பிக்கைக்குரியவராக இருந்த கார்லோஸ் ஸ்பாடோனி, அந்த உடலை முதலில் பார்த்தவர்களில் ஒருவராவார். "ஜெனரல் பெரோனும் தோட்டக்காரரும் நானும் சவப்பெட்டியிலிருந்து உடலை வெளியே எடுத்தோம்," என 2012-ஆம் ஆண்டில் பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

"நாங்கள் அதைச் சலவைக்கல் மேசையின் மீது வைத்தோம், அப்போது எங்கள் கைகள் மண்ணால் அழுக்கடைந்தன. எனவே, அந்த உடலைச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. இசபெல் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்... ஒரு பருத்தித் துணி மற்றும் தண்ணீரைக் கொண்டு அதைச் செய்தார். வேறு எதுவும் பயன்படுத்தவில்லை, மிகவும் கவனமாகச் செய்தார். இசபெல் அந்தப் பொன்னிற முடியை வாரினார். அது நீளமான முடியாக இருந்தது; அவர் சீப்பைக் கொண்டு அதைச் சிறிது சிறிதாகச் சுத்தம் செய்து, பின்னர் 'ப்ளோ-டிரையர்' (blow-dryer) மூலம் உலர்த்தினாள்." என்று அவர் தெரிவித்தார்.

மீண்டும், முன்னாள் அமைச்சர் ஜோஸ் லோபஸ் ரெகாவின் அமானுஷ்ய நம்பிக்கைகளை மையமாகக் கொண்ட கதைகளுடன், அடுத்து என்ன நடந்தது என்பது குறித்த கட்டுக்கதைகள் பரவின. ஒரு கதையின்படி, 'எவிடா'வின் அரசியல் செல்வாக்கும் ஈர்ப்பும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, எவா பெரானின் உடலுக்கு அருகில் படுத்துக்கொள்ளுமாறு அந்தப் பெரோனிச அரசியல்வாதி இசபெல்லிடம் கூறினார்.

இத்தகைய நம்பிக்கைகள், எவிடாவின் ஆதரவாளர்கள் அவர் மீது கொண்டிருந்த கிட்டத்தட்ட மதரீதியான ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தின. தனது கணவருடன் இணைந்து அதிகாரத்துக்கு வந்த அந்த முன்னாள் நடன விடுதிப் பெண், தனது பக்தர்களுக்கு ஒரு ஆன்மீகத் தலைவராகத் திகழ்ந்தார். பெரோன்-எதிர்ப்பாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதிலும், அவரது உடல் அவர்களுக்கு ஒரு புனிதமான முக்கியத்துவத்தைப் பெற்றது.

1973-இல் ஆர்ஜென்டினாவில் ஜுவான் பெரோன் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார். அப்போது இசபெல் துணை அதிபராக இருந்தார். எவிடாவின் உடல் ஸ்பெயினிலேயே வைக்கப்பட்டிருந்தது, ஆனால் 1974-ஆம் ஆண்டில் ஜுவான் திடீரென காலமான பிறகு, அவரது உடல் பியூனஸ் அயர்ஸுக்குக் கொண்டு வரப்பட்டது.

தலைநகரில் உள்ள ஒரு மதுக்கூடம் ஒன்றில் டொமிங்கோ டெல்லெச்சியா அமர்ந்திருந்தபோதுதான், எவிடாவின் உடலுக்கு ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்யுமாறு அவரிடம் முதன்முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது. "கருப்பு நிற ஆடைகள் அணிந்த இருவர் உள்ளே வந்தனர்," என்று 2012-ஆம் ஆண்டில் அவர் பிபிசியிடம் கூறினார். "அவர்கள் கதவுகளைவே கமாக திறந்துவிட்டு எங்களை உற்று நோக்கினர். இது ஆபத்தான ஒரு சூழலாக இருந்தது. ஏனெனில், அக்காலகட்டத்தில் மக்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, 'காணாமல்' ஆக்கப்பட்டு, அதன் பிறகு ஒருபோதும் காணப்படாமல் போகும் நிலை நிலவியது."

எவா பெரான்

பட மூலாதாரம், Getty Images

டெல்லெச்சியா கலைப்பொருட்கள், பழங்காலப் பொருட்கள் மற்றும் மனித உடற்பாகங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அரசாங்கத்தின் படுகொலைப்படைகள் குறித்த அச்சத்தில் இருந்த அவருக்கு, அந்த இரு நபர்களும் வெறும் ஓட்டுநர்கள் என்பது தெரிந்தபோது நிம்மதி ஏற்பட்டது. அவர்கள் அவரை எவா பெரானின் முன்னாள் தனிப்பட்ட மருத்துவரான ஆஸ்கார் இவானிசெவிச்சிடம் அழைத்துச் சென்றனர். "அவர் என்னிடம், 'உங்களுக்காக ஒரு வேலை இருக்கிறது. நீங்கள் எவா பெரானின் உடலைச் சீரமைக்க வேண்டும்' என்று கூறினார்."

அபாயங்கள் குறித்து அறிந்திருந்தும் டெல்லெச்சியா அந்தப் பணியை ஏற்றுக்கொண்டார். "இப்பணியைச் செய்வது என்பது, அந்த உடலை மறைத்தவர்களுக்கு எதிராக என்னை நிறுத்திக்கொள்வதாகும்; மேலும், எவிடா ஒருபோதும் மீண்டும் வெளிப்படவே கூடாது என்று விரும்பியவர்கள் பலர் இருந்தனர். இதனால் எனக்குச் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பது எனக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.

மேலும், "எனக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன; தொலைபேசி வாயிலாக மிரட்டல்கள் வந்தன, எனது கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது." என்றார்.

ஆர்ஜென்டினாவில் அடுத்தடுத்து வந்த ஆட்சிக் காலங்களில் அரசின் அடக்குமுறையும் சித்திரவதையும் முறையான நடைமுறையாக மாறியதைத் தொடர்ந்து, அந்தப் பழமையான பொருட்களைச் சீரமைக்கும் நிபுணரான அவர் பின்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.

இறுதியில், 1976-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மிகச் சிலரின் முன்னிலையில் எவிடா நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது உடல் மீண்டும் ஒருபோதும் தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அந்த அடக்க அறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அந்தச் சலவைக் கல் கல்லறையின் தரையில் ஒரு மறைவான அறைக்குச் செல்லும் வகையிலான ஒரு ரகசியக் கதவு அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறையிலிருந்து, அவரது சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறைக்குச் செல்லும் வகையில் இரண்டாவது ரகசியக் கதவும் இருந்தது. அவர் இறந்து 24 ஆண்டுகள் கடந்திருந்த போதிலும், எவிடா கொண்டிருந்த குறியீட்டு முக்கியத்துவம் மற்றும் செல்வாக்கின் காரணமாக, அவரது உடல் தரைமட்டத்திலிருந்து 5 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட வேண்டியிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு